அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பஞ்சமுக அனுமன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கவுரிவாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நரசிம்ம ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வரதராஜபுரம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் இலட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.