அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 229 054(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
தீர்த்தம் பாலாறு
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சண்முகபுரம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்ற போது, அவரது சீடரான ஆஞ்சநேயர் சீதையைச் சந்திக்க இலங்கைக்கு சென்றார். இலங்கையில் சீதாதேவியை சந்தித்த ஆஞ்சநேயர் தற்போது கோயில் அமைந்துள்ள பாலாற்றின் வழியாகத் திரும்பினார். அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் தங்கி ஓய்வெடுத்த பாறையில் சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிற்காலத்தில், இப்பகுதியை சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆற்றின் நடுவே ஆஞ்சநேயர் சுயம்புவாக இருந்தது கண்டறியப்பட்டு தொடக்கத்தில் சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக செவிவழிச்செய்தி கூறுகிறது.

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மலைவையாவூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மலைவையாவூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நர்த்தன அனுமன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மலைவையாவூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இராம அவதாரத்தில் இராமபிரானுக்கு இராவணனுக்கும் நடைபெற்ற போரில் ஒரு கட்டத்தில் இராமனின் தம்பி இலட்சுமணன் மூர்சையாகிவிடுகிறான். அந்த பரம்பொருளான இராமன் நினைத்திருந்தால் இலட்சுமணனை ஒரு நொடியில் எழுப்பிவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு மனமில்லை. அருகிலிருந்த விபீடணன் இராமனுக்கு ஆறுதல் தந்ததோடு, சஞ்சீவிபர்வதத்திலிருக்கும் மூலிகையை எடுத்து வந்து இலட்சுமணனை முகத்தில் படவைத்தால் மூர்ச்சையிலிருந்து எழ இயலும் என்று கூறுகிறான். இச்செயலைக் செய்ய சர்வமும் தானேயென்று இருக்கும் மகாபராக்கிரமனான ஆஞ்சநேயர் ஒருவரால்தான் இயலும் என்பதை உணர்ந்த இராமன், அனுமனிடம் வந்து உதவி கேட்கிறார். என்றும் தன் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் அந்த ஸ்ரீராமனே தன்னிடம் உதவி கேட்டதால், உடனே சஞ்சீவி பர்வதத்தை அடைந்து மூலிகையைத் தேடுகிறான், ஆஞ்சநேயர். அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சஞ்சீவி பர்வதத்தையே தனது கைகளில் தூக்கி நிறுத்தி பறந்து வந்துவிடுகிறான். ஸ்ரீராமன் முகத்தில் அனுமனைக் கண்டதும் பரவசம் மேலிடுகிறது. விபீடணன் அடையாளம் காட்ட, சஞ்சீவி மூலிகையை இலட்சுமணனின் முகத்தில் வைக்க, அவரும் மூர்ச்சையிலிருந்து விடுபட்டு எழுகிறான். தாங்க முடியாத சந்தோஷத்தில் செயற்கரிய செயலைச் செய்து முடித்த ஆஞ்சநேயரை ஆரத் தழுவிக் கொள்கிறார் இராமசந்திர பிரபு. அப்போது அனுமனின் கைகளை அவர் கவனிக்க, மலையை சுமந்து வந்ததால் உள்ளங்கையில் புண்கள் ஏற்பட்டு இரணமாகியிருந்தது. திடுக்குற்ற இராமர், தாமரை மலரைக் கொண்டு அனுமனின் கையை மெல்ல வருடி விடுகிறார். ஆஞ்சநேயனுக்கோ, தனது இதயத்துள் வைத்து பூஜிக்கும் இராமச்சந்திரப் பிரபுவே தனக்கு சேவை செய்ததில் சந்தோஷம் பிடிபடவில்லை. துள்ளிக் குதிக்கிறான். நர்த்தனமாடுகிறான். இப்படி நர்த்தனக் கோலத்தில் அனுமன் காட்சிதரும் புனித்தலம், மலைவையாவூர். இங்கு வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.