அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி, திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கல்லுக்குழி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயில் கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்புரிந்து கொண்டிருந்தார். அங்கு பணியாற்றும் ரயில்வே ஊழியர்களும், பயணிக்க வந்த மக்களும் இவரை வழிபடுவது வழக்கம்.


1928-
ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டுப் பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக பதவி வகித்த திரு. ஆர்ம்ஸ்பி என்ற வெள்ளைக்காரர் ரயில்வே நடைபாதை ஓரத்திலிருந்த ஆஞ்சநேயரை அகற்ற உத்தரவிட்டார். அந்தச் சிறிய கோயில் இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை. அன்றிரவு, வெள்ளைக்கார ரயில்வே பொது மேலாளர் அந்த விக்கிரகம் இருந்த இடத்தில் அருகில் இரண்டு இரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார். காலையில் அவசர அவசரமாக எழுந்து வந்து பார்த்தால், அவர் கனவில் கண்ட காட்சி அப்படியே இருப்பதைக் கண்டு அதிசியத்தார். இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப்பட்டது. அப்பொழுதான் அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குத் தன் தவறு புரிந்தது. உடனே, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த இரயில் நிலையத்திற்கு அருகிலேயே வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் தான் கல்லுக்குழி. ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தாராம். கோயில் முழுவதுமாக உருவானதும், ஒரு சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட் பாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்ற முடிந்ததாம். புதிய இடத்தில் கல்லுக்குழி என்று சொல்லப்படும் இரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கட்டப்பட்ட கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன், ரயிலில் பிரயாணம் செய்த ஒருவர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையில் இந்த ஆஞ்சநேயர் உருவச்சிலை இருந்திருக்கிறது. இதனைக் கவனித்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை நிறைய அதிகம் உள்ள அந்த சாக்கு மூட்டைக்கு அபராதப் பணம் (லக்கேஜ் சார்ஜ்) கட்டும்படி கூறியிருக்கிறார். பயணியோ, தன்னிடம் பணம் இல்லை என்றும், பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அங்கேயே விட்டுச் சென்று விட்டாராம். போனவர், போனவர்தான். திரும்பி வரவில்லை. ஆதரவற்றுக் கிடந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஓர் அழகான ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பத்தில் இருந்தாராம். அதைத்தான், அந்தப் பிளாட் பாரத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் மாதிரி சிறிய அளவில் கட்டி வழிபட்டார்களாம். அங்கு பணியாற்றிய இரயில்வே ஊழியர்கள். அந்த ஸ்ரீ ஆஞ்சநேயர்தான் இன்று கல்லுக்குழியில் பெரிய கோயிலில் அருள்புரிகிறார்.

கிழக்குப் பார்த்த இராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபத்தில் அமைந்துள்ள துவஜ ஸ்தம்பம் பெரிய அளவில் உள்ளது. துவஜஸ்தம்பத்தின் இடதுபுறம் பெரிய அரசமரமும் வேப்ப மரமும் இணைந்திருக்க அந்த மரங்களின் நிழலில் அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும் சிறிய அளவில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவர்களை வணங்கிவிட்டு மாமண்டபத்தினைத் தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்திற்குள் இரண்டடி அகலத்திலும், மூன்றடி உயரத்திலும் உள்ள சிறிய கருவறையில் ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஓரடி உயரமுள்ள புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் இவரது இடது பாதம் வடக்கு நோக்கியும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இவரது கால் ஓங்கார வடிவில் வடக்கு திசை நோக்கி வளைந்திருப்பது தனிச்சிறப்பு என்கிறார்கள். இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கும் இவரது வலது கரம் பக்தர்களுக்கு ஆசிவழங்கும் நிலையில் அபய ஹஸ்தத்தில் உள்ளது. இவரது திருமுகம் வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் அருள்புரிகிறது. அர்த்த மண்டபத்திற்குள் இடதுபுறம் அருள்புரியும் உற்சவர் திருமேனி, பஞ்ச லோகத்தினால் ஆனது. இவரது உயரம் சுமார் இரண்டடி இருக்கும். வெள்ளிக் கவசம் அணிந்து இடது கையில் கதையுடனும் வலதுகரத்தில் ஆசி வழங்கும் நிலையிலும் காட்சி தருகிறார் உற்சவர். மூலவர் சுந்தர ஆஞ்சநேயரைத் தரிசித்தபின், கருவறை வெளிப்புறத்தை வலம் வந்தால், வலது புறம் கிழக்கு நோக்கி அருள்புரியும் சக்கரத்தாழ்வாரை தனிச் சன்னதியில் தரிசிக்கலாம். பதினாறு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார் புதிதாக இரண்டு வருடங்களுக்கு முன் திருப்பணி செய்யும் பொழுது தனிக்கோயில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பக்தர்களுக்கு சக்கரத்தாழ்வாரைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. சாந்த சொரூபியாகத் திகழும் இவருக்கு ஒவ்வொருமாதமும் சித்திரை நட்சித்திர தினத்தன்று சுதர்சன ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் அருள்மிகு யோக நரசிம்மர் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு இடது புறத்தில் பாண்டுரங்கனுக்கு தனிச்சன்னதி உள்ளது. இவரது சன்னதிக்கு அருகில் பெரிய ஆலமரம் காணப்படுகிறது. பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த ஆலமரம் மிகவும் பழமையானது எனப்படுகிறது. அதற்கு, அடுத்து தியான மண்டபம். இங்கு அருள்மிகு ஆஞ்சநேயர் பெரிய திரு உருவில் அமர்ந்த நிலையில் மேடையில் கிழக்கு நோக்கி தவக்கோலத்தில் யோக ஆஞ்சநேயராக சுதைவடிவில் காட்சி தருகிறார். தியான மண்டபத்தின் எதிரில் நவக்கிரகத் தொகுப்பு வடகிழக்கு மூலையில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் உள்ள அரசும் வேம்பும் உள்ள மரத்தடியில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிக்குப் பின்புறம் நாகர்கள் சிலைகள் வரிசையாக உள்ளன.

திருவிழா:

அனுமன் ஜெயந்தி

வேண்டுகோள்:

வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் இவரை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால் அந்தப் பிரார்த்தனை நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள். இவரை வழிபட சனியின் தாக்கம் நீங்கும், பதவி உயர்வு கிட்டும். மேலும் இந்த சுந்தர ஆஞ்சநேயர், குபேர திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வ வளம் பக்தர்களுக்கு நிறைந்து காணப்படும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சுதர்சன யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆஞ்சநேயருக்கு உகந்த சனிக்கிழமைகளில் இக்கோயில் பக்தர்களால் நிறைந்து காணப்படும்.

நேர்த்திக்கடன்:

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றியும், அபிஷேகம் ஆராதனைகள் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *