அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம்

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

+91- 99409 94548 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று முழு நேரம் கோயில் திறந்திருக்கும்.

மூலவர் பாறையடி முத்துக்கருப்பணர் (பாறையடி முத்தையா)
தீர்த்தம் பாறைடி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தமபாளையம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், “பாறையடி முத்தையாஎன்று அழைக்கப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, “ஐயாஎன்று அழைக்கிறார்கள்.

அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி

அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பண்ண சுவாமி, அங்காள பரமேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராங்கியம் உறங்காப்புளி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இராமபிரான் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி திரும்பும் போது, பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களும் பின் தொடர்ந்தன. அவர் செல்லும் வழியில் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கினார். அந்தமரம் இரவு வேளையிலும் உறங்காமல் இருந்து அவரை பாதுகாத்தது. எனவே இந்த மரம் உறங்காப்புளிஎனப்பட்டது. இப்போதும் இங்குள்ள புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்குள்ள கருப்பசுவாமியும் அவரைப் பாதுகாத்தார். புளியமரத்தடியில் மந்திரமூர்த்தி எனப்படும் முத்துவீரப்ப சுவாமிகள், பொம்மணன், திம்மணன், ஆகாசவீரன் ஆகிய கருப்பசுவாமியின் தளபதிகளும் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது.

பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள்.