அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் மாவட்டம்.

காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.

பைரவர் என்பவர், சிவனின் அம்சம். சேத்திரங்களை இவர் காப்பதால் சேத்திரபாலகர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில் பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள். பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கம். பொன்னும், பொருளும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால் கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாசித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத் தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு பைரவரின் அருளே பிரதான காரணம்.

அருள்மிகு இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

அருள்மிகு இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில், சிவகங்கை மாவட்டம்.

+04565 – 255 373, 94866 71544(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 முதல் 12மணி மாலை 5 முதல் 8மணிவரை திறந்திருக்கும்.

 

ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம்.

இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு இலிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் இலிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, “சுகந்தவனேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள். எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை. வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.