அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 256 273, 94439 85770, 98425 93244

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் பன்னீர் மரம்
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் காமிகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீழைத்திருக்காட்டுப்பள்ளி
ஊர் கீழைத்திருக்காட்டுப்பள்ளி, ஆரண்யேசுரர் கோயில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், நாவுக்கரசர்

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.

அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாதுஎன்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர்என்று அழைக்கப்படுகிறார். “காட்டழகர்என்றும் இவருக்கு பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது.

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 424 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவேதாரண்ய சுவாமி
அம்மன் பிரமவித்யாநாயகி
தல விருட்சம் வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம் முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர் திருவெண்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்

பிரம்மனிடம் பெற்ற வரத்தால், மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து, சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவரை சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம்என்பார்கள்.

சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.