அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 256 273, 94439 85770, 98425 93244

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் பன்னீர் மரம்
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் காமிகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீழைத்திருக்காட்டுப்பள்ளி
ஊர் கீழைத்திருக்காட்டுப்பள்ளி, ஆரண்யேசுரர் கோயில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், நாவுக்கரசர்

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.

அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாதுஎன்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர்என்று அழைக்கப்படுகிறார். “காட்டழகர்என்றும் இவருக்கு பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது.

சுவாமி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் ராஜயோக தெட்சிணாமூர்த்திஎன்று அழைக்கப்படுகிறார். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் நண்டு விநாயகர்என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள். ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

மூலவரின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படும். பிரகாரத்தில் தசலிங்கம்சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு இலிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே இலிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

இந்த அமைப்பை குறிப்பிட்டு சம்பந்தர், “தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையர்என்று பாடியிருக்கிறார். இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு இருக்கிறது. இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

தோலுடையான் வண்ணப் போர்வையினான் கண்ணவெண்ணீறு துதைத்திலங்கு நூலுடை யானிமை யோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேலுடையான் இமையாத முக்கண்மின் இடையாளொடும் வேண்டினானே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.

பிரார்த்தனை:

தெரியாமல் செய்த பாவம் நீங்க, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும், தெட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி அதிகமில்லை. திருவெண்காடு வரை பஸ்சில் சென்று, அங்கிருந்து 1 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *