அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர்

அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளீஸ்வரர்
அம்மன் சிவகாமசுந்தரி
தலவிருட்சம் வில்வமரம்
தீர்த்தம் ஹோம குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வில்லியநல்லூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

ஒவ்வொரு யுகத்தில் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன். அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார். முதல் யுகத்தில்தான் சிவபார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம் திருமணஞ்சேரி. மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தபோது, அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி. மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.

காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டது. அதனால் ஹோம குளம் என்றே பெயர். சிவபார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூபக் காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.

அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி

அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

+91-451 2555 455, 97876 18855, 94865 02714

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மவுனகுருசாமி
உற்சவர் மவுனகுருசாமி
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கசவனம்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சில ஆண்டுகளுக்குமுன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் மவுனகுரு நிர்வாணசுவாமிகள்என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள், மூலம் நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையன்று (22.10.1982) இவர் முக்தி பெற்றார். இந்நாளில் குருபூஜை நடக்கும். மூன்று நாள் நடக்கும் விழாவில், தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற தலங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தால், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மூலத்தன்று காலையில் விசேஷ அபிஷேகத்துடன், பூஜை உண்டு. பக்தர்கள் குருபூஜைக்கு முன்பாக, 48 நாள் விரதமிருந்து, இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அன்று அன்னதானமும் உண்டு. சிவராத்திரியன்று இரவில் இங்குள்ள இலிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடக்கிறது.