அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம்

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 98943 24430 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எமதர்மர்
தீத்தம் எமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருச்சிற்றம்பலம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து அவன் மூலமாக சிவனின் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின் இரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் தலத்தில் உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. இவருக்கு அருள்செய்த சிவனுக்கு இங்கிருந்து சற்று தூரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற ஆடை அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு இராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இவரது உக்கிரத்தை குறைப்பதற்காக நேரே இராஜகணபதியும், அவருக்கு பின்புறத்தில் பால தண்டாயுதபாணியும் இருக்கின்றனர். எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார்.

அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம்

அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4252 – 278 831 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

மூலவர் தத்தாத்ரேயர்
அம்மன் சவுந்திரநாயகி
தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் அமராவதி
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குமாரலிங்கம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, “நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்.” “என்ன பரிகாரம் செய்தால் எனது பாவம் நீங்கும்?” என்று மன்னர் கேட்க, “இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.

மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும் வகையில் இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.