அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர்

அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளீஸ்வரர்
அம்மன் சிவகாமசுந்தரி
தலவிருட்சம் வில்வமரம்
தீர்த்தம் ஹோம குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வில்லியநல்லூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

ஒவ்வொரு யுகத்தில் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன். அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார். முதல் யுகத்தில்தான் சிவபார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம் திருமணஞ்சேரி. மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தபோது, அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி. மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.

காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டது. அதனால் ஹோம குளம் என்றே பெயர். சிவபார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூபக் காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.

வழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே இருப்பது வித்தியாசமான அமைப்பு. சண்டிகேஸ்வரருக்கு, க்ருதயுகத்தில் நான்கு முகம்; திரேதாயுகத்தில் மூன்று முகம்; துவாபரயுகத்தில் இரண்டு; இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன சிவாகம புராணங்கள். இங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். க்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தை வலம் வந்து கோஷ்ட தெய்வங்களான கணபதி, தென்முகக்கடவுள், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கையை துதிக்கலாம். பிராகாரத்தில் சுப்ரமண்யர் சன்னதி, சதுர்முக சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி

கோரிக்கைகள்:

இரட்டைப் பிள்ளையாரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி கைகூடும் என்பது ஐதீகம். மணப்பேறு, மகப்பேறு கிட்ட, பித்ருசாபங்கள் தீர, நோய்கள் அகல இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

நாகை மாவட்டம் குத்தாலம் பந்தநல்லூர் பேருந்து சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியநல்லூர் என்ற இந்த தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *