அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி

அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

+91-451 2555 455, 97876 18855, 94865 02714

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மவுனகுருசாமி
உற்சவர் மவுனகுருசாமி
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கசவனம்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சில ஆண்டுகளுக்குமுன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் மவுனகுரு நிர்வாணசுவாமிகள்என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள், மூலம் நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையன்று (22.10.1982) இவர் முக்தி பெற்றார். இந்நாளில் குருபூஜை நடக்கும். மூன்று நாள் நடக்கும் விழாவில், தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற தலங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தால், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மூலத்தன்று காலையில் விசேஷ அபிஷேகத்துடன், பூஜை உண்டு. பக்தர்கள் குருபூஜைக்கு முன்பாக, 48 நாள் விரதமிருந்து, இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அன்று அன்னதானமும் உண்டு. சிவராத்திரியன்று இரவில் இங்குள்ள இலிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடக்கிறது.

ஆடம்பரமான உணவுகளை விரும்பாத நிர்வாண சுவாமிகள், கூழ், கீரை போன்ற எளிய உணவுகளையே சாப்பிட்டார். அதிகமாக சிகரெட் பிடிப்பதும் அவரது வழக்கமாக இருந்தது. இவ்வாறு, அவர் புகைப்பிடித்து வெளியிடும் புகை போல, இங்கு வரும் பக்தர்களின் துன்பங்கள் நீங்கிவிடுவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதற்காக, இங்கு தினமும் நான்கு கால பூஜையிலும் சுவாமியின் கையில் சிகரெட்டை பற்ற வைக்கின்றனர். இங்கு பக்தர்களும் இவருக்கு சிகரெட் பற்றவைத்து வழிபட்டுச் செல்கின்றனர். முன்வினைப்பயன், கடன் நீங்குவதற்காக அதிகளவில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். சிகரெட் சாம்பலுடன், சிறிது விபூதியைச் சேர்த்து பிரசாதமாகவும் தருவதுண்டு. கோரிக்கைகளை சீட்டில் எழுதி, கையில் வைத்தும் வழிபடும் வழக்கம் இருக்கிறது.

பிரதான சன்னதியில் அதிஷ்டானம் செய்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்புறம் நிர்வாண நிலையில் ஜோதி மவுனகுருசுவாமிகள் அமர்ந்திருக்கிறார். இவருக்கான மற்றொரு உற்சவர் சிலையும் இங்குள்ளது. பிரதோஷ பூஜையின்போது இவர் கோயிலை வலம் வருவார். இங்கு நிர்வாணசுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். இதை, பசு வடிவம் உள்ள ஒரு பாத்திரத்தில் வைத்துள்ளனர். இதில் தீர்த்தம் பெறுவது, தேவலோகப் பசுவான காமதேனுவிடமே பிரசாதம் பெறுவது போல நம்பிக்கை இருக்கிறது. இத்தலத்திற்கு அருகில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குதான் நிர்வாண சுவாமிகள் தங்கியிருந்தார். இவரது உயிர் பிரிந்ததும் இங்குதான். இக்கோயிலில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது.

திருவிழா:

குருபூஜை, பிரதோஷம், சிவராத்திரி

வேண்டுகோள்:

முன்வினைப்பயன், கடன் நீங்குவதற்காக அதிகளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள மவுனகுருசுவாமிக்கு சிகரெட் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *