Monthly Archives: February 2012

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி, தேனி மாவட்டம்.

தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக போட முடியாததைக் கொண்டு சுயம்பு வளர்ச்சியை அறியலாம். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதற்கு பரிகாரமாக கோயிலுக்குத் தேவைப்படும் பொருட்களை பக்தர்கள் தந்து மகிழ்கின்றனர். பலருடைய வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்கள், சிக்கல்கள் நீங்கியுள்ளதால் வாழ்க்கை குறை நீக்கும் தலமாக இப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91 4634 250 209 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பாணதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரையார்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐயனார்எனப்பட்டார். பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.

பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.