Monthly Archives: February 2012

தியாகராஜர் பிருந்தாவனம், திருவையாறு

தியாகராஜர் பிருந்தாவனம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94436 62578 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தியாகராஜர்
உற்சவர் தியாகராஜர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவாரூரில் வசித்த சங்கீத வித்வான் இராமபிரும்மம், சாந்தா தேவியாரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இளமையிலேயே இசைப்புலமை பெற்ற தியாகராஜருக்கு எட்டாம் வயதில் தந்தை காயத்ரி, இராமதாரக மந்திர உபதேசம் செய்தார். தந்தையிடமிருந்த இராமர் சிலையை வாங்கி, தினமும் இராம சடாட்சரிமந்திரத்தைப் பாராயணம் செய்து வழிபட்டார். தாயார் அவருக்கு இராமதாசர், புரந்தரதாசரின் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். கல்லூரியில் இராமாயணம் படித்தவருக்கு, இராமர் மீது பக்தி கூடியது. தினமும் 1 லட்சத்து 25 ஆயிரம் முறை இராமநாமம் சொல்லி, 38ம் வயதிற்குள் 96 கோடி முறை பாராயணம் செய்து விட்டார். அவரது 38ம் வயதின் கடைசி நாளில், இராமனை மனமுருகிப் பாடியபோது, வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்தபோது, விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இராம, இலட்சுமணர் செல்வது போலக் காட்சி கிடைக்கப்பெற்றார். பின், பலருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். இவர் காவிரிக்கரையில் ஐக்கியமான இவ்விடத்தில் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.

காவிரியின் வடகரையில் அமைந்த பிருந்தாவனம் இது. தியாகராஜர் ஜீவசமாதியான இடத்தின் மேலே அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் பத்மாசனத்தில் அமர்ந்து, வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். மார்பில் உருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இவருக்கு பின்புள்ள பீடத்தில் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக இலிங்கம் உள்ளது.

அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர்

அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94434 69361, 95851 11871 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவரசமூர்த்தி
அம்மன் சொக்காயி அம்மன்
தலவிருட்சம் அரசமரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மெய்யாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கும், அந்தகாசுரன் என்பவனுக்கும் இடையே போர் நடந்தது. சூரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து அசுரர்கள் தொடர்ந்து தோன்றினர். இவர்களை ஒழிக்க, சிவன் தன்னிடமிருந்து தோன்றிய அக்னியிலிருந்து, யோகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினார். போரில் ஈடுபட்ட சிவனுக்கு இந்த சக்திகள் உதவி செய்து அரக்கர்களை ஒழித்தனர். போரில் வெற்றி பெற்ற சிவனுக்கு வாழ்த்துக்கூறிய சப்தகன்னிகள் மெய்யாத்தூரில் உள்ள ஆண்டவர் கோயிலில் எழுந்தருளினர். இந்தக் கோயிலில் திருவரசமூர்த்தியும், சொக்காயி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வூரில் குடியிருப்பவர்கள் தங்களை திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாப்பதாக நம்புகின்றனர். விஜயதசமியன்று சொக்காயி அம்மனை நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மனதில் நினைத்து, விரதம் இருக்க வேண்டும். நமக்கு வசதிப்படும் நாளில் இங்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால் எண்ணியது நிறைவேறுவதுடன், மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் ஏற்படுவதாக நம்பிக்கை. வேப்பிலை பாவாடை கட்டி தீ மிதிக்கும் சடங்கும் இங்கு நடக்கிறது. விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக இந்த மாதர்களிடம் வேண்டிக் கொள்ளலாம்.