Monthly Archives: February 2012

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்ரகுப்தர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் இந்திராணிக்கு, தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு.

யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்டத் தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார். இரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.

+91-99944 98109 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்திரபுத்திரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோடாங்கிபட்டி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

சிவன், ஜீவராசிகள் செய்யும் காரியங்களை கணக்கு எழுதுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையை படைக்க எண்ணினார். ஒருமுறை அவர் சக்திதேவியை பார்க்க, பார்வையின் குறிப்பறிந்த அவள் ஒரு சித்திரம் வரைந்தார். அதற்கு இருவரும் உயிரூட்ட அதிலிருந்து தோன்றியவரே சித்திரபுத்திரர் ஆவார்.

இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும், “சித்திரபுத்திரன்என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.

இவர் பிறந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பவுர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அன்று வாசலிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு, சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

சித்திரம் என்றால் ஆச்சரியமானது,” “குப்தம்என்றால் ரகசியம்என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதிவிடும் சித்திரபுத்திரரின், கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவேதான் இவர் சித்திரகுப்தன்எனப்படுகிறார்.

இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில், ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது.

திருவிழா:

சித்ராபவுர்ணமி.

வேண்டுகோள்:

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி. எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.