Monthly Archives: February 2012

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர்

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 253 227 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 6.30 மணி. செவ்வாய், வெள்ளியில் காலை 7- மாலை 6 மணி

மூலவர் வீரபத்திரர் (வழிக்கரையான்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வழுவூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிட்சாடனாராக அங்கு வந்தார். திருமால், மோகினி வேடத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். மோகினி வடிவிலிருந்த திருமாலைக் கண்ட ரிஷிகள், அவளது அழகில் மயங்கி, தாங்கள் செய்த யாகத்தை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். பிட்சாடனார் வடிவிலிருந்த மிக அழகிய சிவனைக் கண்ட ரிஷிபத்தினிகள், தங்களது நிலை மறந்து அவர் பின் சென்றனர். பின்னர், தங்கள் நிலை உணர்ந்த ரிஷிகள், வந்திருப்பவர்கள் இறைவன் என அறியாமல், சிவன் மீது அக்னி, புலி, மான், மழு, நாகம் என பல ஆயுதங்களை எய்து போரிட்டனர். சிவன் அவற்றையெல்லாம் அடக்கி, தனது ஆபரணங்களாக்கிக் கொண்டார். முனிவர்கள் ஒரு யானையை அனுப்பினர். அதன் தோலைக் கிழித்த சிவன், கஜசம்ஹார மூர்த்தியாக காட்சி தந்தார். ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. பின்பு அவர்கள் உண்மையை உணர்ந்து சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களை மன்னித்தருளினார். மோகினி வடிவில் இருந்த திருமாலுக்கும், சிவனுக்கும் சாஸ்தா பிறந்தார். அவரது பாதுகாப்பிற்காக சிவன், தனது அம்சமான வீரபத்திரரை காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீரபத்திரரே இத்தலத்தில் காட்சி தருகிறார். பால சாஸ்தாவும் இங்கிருக்கிறார்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 92454 18708, +91- 97905 25241.

மாலை 5- 6 மணி. ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. பகலில் சுவாமியை தரிசிக்க முன்னரே அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் பத்திரகாளி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாரகவனம்
ஊர் தாராசுரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

உத்தரகாண்டம் பாடிய ஒட்டக்கூத்தர், வீரபத்திரரின் பக்தராக இருந்தார். அவர் இராஜராஜ சோழனிடம் வீரபத்திரருக்கு கோயில் கட்டும்படி கூறினார். மன்னனும் அதை ஏற்று, இங்கு கோயில் கட்டினான். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள வீரசைவ மடத்தில் தங்கியிருந்த ஒட்டக்கூத்தர், தினமும் இங்கு வந்து வீரபத்திரரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் ஒட்டக்கூத்தர் தங்கியிருந்த மடத்தின் வழியே ஒருவர், தேவாரப்பாடல் பாடியபடி சென்றார். ஒட்டக்கூத்தர் அவரிடம் பாடலின் பொருள் கேட்டார். அவரோ பொருள் தெரியாது என்றார். இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் கோபத்தில் அவரை அடிக்கவே, அவர் இறந்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள் ஒட்டக்கூத்தரை தேடி வந்தனர். நடந்ததை மன்னனிடம் கூறிய ஒட்டக்கூத்தர், ஓரிடத்தில் மறைந்து கொண்டார். நற்புலவரை இழக்கக்கூடாது என்று எண்ணிய மன்னன், ஒரு பல்லக்கில் தன் மகனை அமர்த்தி, “இவர்தான் ஒட்டக்கூத்தர். கொடிய செயல் செய்த இவரை நீங்கள் பார்ப்பதுகூட பாவம்தான். எனவே பல்லக்கில் வைத்தே கொன்றுவிடுங்கள்என்று சொல்லி அனுப்பி வைத்தான். கூட்டத்தினர் சந்தேகப்பட்டு பல்லக்கைத் திறந்தபோது மன்னனின் மகன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது ஒட்டக்கூத்தர் ஓடிவந்து,”நான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. தினமும் தாராசுரம் வீரபத்திரரை தரிசிப்பது என் வழக்கம். இன்று என்னால் அந்த கடமையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே நான் இறக்கும் முன் சுவாமியை வழிபட அனுமதியுங்கள்என்றார். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை தரிசித்துவிட்டு, அருகிலிருந்த முளைச்சாளம்மன் (மோட்சாளம்மன்) சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். கூட்டத்தினர் அவருக்காக காத்திருந்தனர். நள்ளிரவாகியும் அவர் வெளியே வரவில்லை. கூட்டத்தினரும் அவரை விடுவதாக இல்லை. கலங்கிய ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம் தன்னை காக்கும்படி வேண்டினார். அம்பாள் அவருக்கு காட்சி தந்து, “உனது மானசீக தெய்வமான வீரபத்திரர், தட்ச யாகத்தை வென்றதை பற்றி பரணி பாடு. அவரருளால் நீ காப்பாற்றப்படுவாய்என்றாள். ஒட்டக்கூத்தரும் தக்கயாகப்பரணிபாடினார். மறுநாள் அதிகாலையில் தான் எழுதியதை ஒரு ஜன்னல் வழியாக வெளியில் இருந்தவர்களிடம் கொடுத்தார் ஒட்டக்கூத்தர். அதை படித்தவர்கள் மகிழ்ந்து, ஒட்டக்கூத்தரை பாராட்டிவிட்டுச் சென்றனர். அதன்பின் அந்நூலை முறையாக அரங்கேற்றம் செய்தார் ஒட்டக்கூத்தர். தக்கயாகப்பரணி இயற்றப்பட்ட தலம் இது.