அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர்

அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94434 69361, 95851 11871 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவரசமூர்த்தி
அம்மன் சொக்காயி அம்மன்
தலவிருட்சம் அரசமரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மெய்யாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கும், அந்தகாசுரன் என்பவனுக்கும் இடையே போர் நடந்தது. சூரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து அசுரர்கள் தொடர்ந்து தோன்றினர். இவர்களை ஒழிக்க, சிவன் தன்னிடமிருந்து தோன்றிய அக்னியிலிருந்து, யோகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினார். போரில் ஈடுபட்ட சிவனுக்கு இந்த சக்திகள் உதவி செய்து அரக்கர்களை ஒழித்தனர். போரில் வெற்றி பெற்ற சிவனுக்கு வாழ்த்துக்கூறிய சப்தகன்னிகள் மெய்யாத்தூரில் உள்ள ஆண்டவர் கோயிலில் எழுந்தருளினர். இந்தக் கோயிலில் திருவரசமூர்த்தியும், சொக்காயி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வூரில் குடியிருப்பவர்கள் தங்களை திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாப்பதாக நம்புகின்றனர். விஜயதசமியன்று சொக்காயி அம்மனை நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மனதில் நினைத்து, விரதம் இருக்க வேண்டும். நமக்கு வசதிப்படும் நாளில் இங்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால் எண்ணியது நிறைவேறுவதுடன், மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் ஏற்படுவதாக நம்பிக்கை. வேப்பிலை பாவாடை கட்டி தீ மிதிக்கும் சடங்கும் இங்கு நடக்கிறது. விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக இந்த மாதர்களிடம் வேண்டிக் கொள்ளலாம்.

திருவரசமூர்த்திக்கு வெள்ளைக் குதிரையும், சொக்காயி அம்மனுக்கு சிவப்பு குதிரையும், பெரிய யானையும், ஒரு குட்டி யானையுடன் கூடிய சிங்கவாகனமும் வாகனங்களாக உள்ளன. இவை சுதைவடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அருகில் நல்லான், பெத்தான், வீரனார் ஆகியகாவல் தெய்வங்கள் உள்ளனர். இவர்களது கைகளில் பாம்பும், கதாயுதமும் உள்ளன. புதிதாக வாகனம் வாங்குவோரும், சாகுபடிக்கு முன்னதாக விவசாய இடுபொருட்கள் வாங்குபவர்களும் இந்த காவல் தெய்வங்களின் முன்பு அவற்றை வைத்து பூஜித்த பிறகே பணிகளை துவக்குகின்றனர்.

தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு சிறப்பிடம் பெறும் ஏழு பெண் தெய்வங்கள் சப்தமாதர்கள். இவர்களை மாத்ருக்கள் என்றும், சப்த கன்னியர் என்றும் அழைக்கின்றனர். மூலவர் திருவரசமூர்த்தியாக இருந்தாலும் சப்தமாதர்களுக்கே இங்கு முக்கிய வழிபாடு. பிராஹ்மி (சரஸ்வதி), மகேஸ்வரி (சிவசக்தி), கவுமாரி (குமாரசக்தி), வைஷ்ணவி (லட்சுமி), வராகி, மாகேந்திரி (இந்திராணி), சாமுண்டா (சாமுண்டி) என்னும் சக்திகள் ஏழு பேரும், பிரம்மா, சிவன், முருகன், விஷ்ணு, வராகமூர்த்தி, இந்திரன், எமன் ஆகியோரின் சக்திகளாக இத்தலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாக்க வேண்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புடவை சாத்தியும், வேப்பிலை பாவாடை கட்டி தீ மிதித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *