Monthly Archives: February 2012

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராஜா அண்ணாமலைபுரம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்..எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர். கேரளப் பாரம்பரிய முறைப்படி பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த 18 படிகளைக் கடந்து சென்றால் கண்குளிரும் வகையில் அமர்ந்துள்ள சாஸ்தாவை தரிசனம் செய்யலாம். கேரளா சபரிமலை தோற்றத்தைப் போல் உள்ளதால் இவ்வாலயத்தை வடசபரிமலை என்று அழைக்கின்றனர். கடும் விரதமிருந்து, பஜனைகள் பாடி, அன்னதானமிட்டு, இருமுடி கட்டி யாத்திரை மேற்கொண்டு சபரிமலைக்குச் சென்று ஐயப்ப தரிசனம் செய்வதுபோலவே, ராஜா அண்ணாமலை ஐயப்பன் கோயில் ஐயனைத் தரிசிக்கவும் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். பஜனைப் பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்குகின்றனர். இருமுடி கட்டிக்கொண்டு, கோயிலுக்கு வந்து, இவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 18 படிகளில் ஏறி, ஸ்வாமியைத் தரிசித்து செல்கின்றனர். இருமுடி இன்றி வருகிறவர்களுக்கெனத் தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன.

அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான்

அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான், மும்பை.

கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஐயன் ஐயப்பன் பூவுலகில் ஆட்சி செய்யும் தலங்கள் பலப்பல. அப்படி மும்பையில் உள்ள மக்களும் ஐயப்பனை தரிசித்து அருள்பெற வேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் கோரேகான் ஐயப்பன் கோயில்.

முதன் முதலில் பக்தர்கள் சிலரால் இப்பகுதியில் விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பிறகு சொந்தமாக நிலம் வாங்கி கோயில் கட்ட தேவப்பிரசன்னம் வைத்துப் பார்த்து, அதன்படி கோயில் கட்டப்பட்டு ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதி, துர்க்காதேவி, சுப்ரமணியன் போன்ற விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோயிலின் நுழைவாசலின் மேல் அனந்த பத்மநாபனின் திருவுருவம் சுதை வடிவமாகக் காணப்படுகிறது. அதற்கு மேலே உள்ள மாடங்களில் ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதியின் திருவுருவங்களும்; மேலே கலசங்கள், உயர்ந்த செப்புத்தகடுகள் வேயப்பட்ட கொடி மரமும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய மண்டபம். அதன் ஒரு பகுதியில் பெரிய மேடை ஒன்று காணப்படுகிறது. மேடை மீது ஏறிச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. மேடையில் தனித்தனி சன்னதிகள். ஐயப்பன் சன்னதியின் முன்பு பதினெட்டுப் படிகள் காணப்படுகின்றன. படிகளின் இரண்டு பக்கங்களிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருக் கின்றன. ஐயப்பனின் மூல முகூர்த்தம், பஞ்சலோகத்தினால் ஆனது. சபரி மலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க இயலாத மனக்குறையை இந்த ஐயப்பன் தீர்த்து வைத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.