Monthly Archives: February 2012

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 94434 94473, 94430 02731 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி 7 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் யாக குண்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சுசீந்திரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ, கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா” (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.

அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவளைப் போல பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசூயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசூயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசூயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், “ஆஸ்ரமம்என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள்.

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி, நாகை மாவட்டம்.

மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட சிறிய கிராமம் இரட்டக்குடி. நாகை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடி வழியாகப் பூந்தோட்டத்தை அடுத்து இந்த கிராமம் உள்ளது. இங்கு கொலுவிருக்கும் ஐயனாரின் திருநாமம் ஆகாச சாஸ்தாவாகும். பூர்ணா, புஷ்கலாம்பாள் சமேதராய் காட்சிதரும் சாஸ்தாவின் கோயில் மிகப் பழமையானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.


சாஸ்தாவின் வலதுபுறம் பிள்ளையாரின் சிலையும் உள்ளது. எதிர்ப்புறம் பைரவரும், குதிரை அருகில் வாளுடன் வீற்றிருக்கும் வீரனின் வடிவங்களையும் தரிசிக்கலாம். அதைத் தவிர வீரனுக்கு தனிச் சந்நிதியும் உள்ளது. கோயில் அருகிலேயே திருக்குளம் உள்ளது. கோயிலின் உள்ளே மேற்புறம் கூரையில் இரு பக்கமும் துளைகள் உள்ளன. சாஸ்தா ஆகாசத்திலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். சில காலம் முன்பு கோயிலைப் புதுப்பிக்கும்போது அந்தத் துளைகளை மூடி விட்டார்களாம். ஐயனார் ஒரு பக்தனின் கனவில் தோன்றி, ‘நான் ஆகாச சாஸ்தா. கூரையின் மேல்புறம் துளைகள் வையுங்கள்’ என்று சொல்லி மறைந்தாராம். இப்போதும் அந்தக் கோயிலின் மேற்கூரையில் துளைகள் இருப்பதைக் காணலாம்.