Monthly Archives: February 2012

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்குவேல் அய்யனார்
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காயாமொழி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்டினர். அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார். தானே விரட்டிச் சென்று தண்டனையம் கொடுத்தார் அய்யனார். இந்த அற்புத நிகழ்ச்சியை இன்றும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி என்று அப்பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் அய்யனார் விழாவில், கடைசி நாளாக நடைபெறும் கள்ளர் வெட்டு வைபவத்தைக் காண அண்டை மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.

அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில், கோச்சடை

அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை மாவட்டம்.

+91 452 6524201 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அய்யனார்
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் வைகை, அழகர் கோவில் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோச்சடை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சிவனின் 64 திருவிளையாடல்களில் கோச்சடை பற்றி சொல்லப்பட்டுள்ளது. தன் பக்தையான வந்தி என்னும் முதியவளைச் சிவலோகத்திற்கு சேர்க்க திருவுள்ளம் கொண்டு வைகை நதியை சிவன் பெருகச் செய்தார். உடனே நகரில் உள்ளவர்கள் உடைந்த கரையை அடைக்க ஆரம்பித்தனர். பிட்டு விற்று உண்பவளும், பிட்டையே சிவனுக்கு நைவேத்யமாக படைப்பவளுமான வந்திக்காக சிவனே கூலியாளாக மண்கூடையை சுமந்து கொண்டு கரையை அடைக்காமல் இருந்தார். இதனால் பாண்டிய மன்னன் சிவனை கோவிச்சு அடித்ததால் கோவிச்சடிஎன்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் கோச்சடைஎன்று பெயர் திரிந்தது. கோச்சடைக்கு மிக அருகில் சொக்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு தான் அன்னை மீனாட்சி முதன் முதலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உள்ளே நுழைந்ததும் முத்தையாவும், வில்லாயுதம் உடைய அய்யனாரும் குதிரை மீது அமர்ந்த படி பஞ்சபூதங்களுடன் நம்மை வர வேற்கிறார்கள். அவர்களை தரிசித்து அப்படியே நேராக சென்றால் இந்திரன் அய்யனாருக்கு அளித்த வெள்ளை யானை உள்ளது. அதையும் தாண்டிச் சென்றால் மூலஸ்தானத்தில் மூலவராக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வில்லாயுதம் உடைய அய்யனார், பூரணை, புஷ்கலை சமேதராக கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தின் முன்பு செண்பகப்பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார், பூரண, புஷ்கலையுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு வெள்ளை யானை தவிர குதிரையும் ரிஷபமும் வாகனங்களாக உள்ளன. இது பாண்டியர் கால புராதனக் கோயிலாகும். அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம். இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும், ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது.