Monthly Archives: February 2012

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமநாத அய்யனார்
அம்மன் பூரணைபுஷ்கலை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சூரக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார் விவசாயி, அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார். “இங்கே கோயில் கட்டி என்னைக் கும்பிட்டா, உங்க மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாத்தறேன்என்று அய்யனார் சுவாமி அருள, அவருக்குச் சிலை வைத்து சின்னதாகக் கோயில் கட்டி வழிபட்டனர். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளச் சித்தர் ஒருவர், இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வந்து, அங்கேயே சில காலம் தங்கினார். அவரைப் பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர். பிறகு, பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்துத் தங்கினார். மிளகு, கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டுக் கஷாயம் தயாரித்து, அதையே உணவாக அருந்துவார் அந்த சாமியார். அய்யனாரை தரிசிக்க வந்தவர்கள், சாமியாரையும் வணங்க அவர்களுக்கு கஷாயத்தை தீர்த்தமாகத் தருவார்.

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம்

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீர்காத்த அய்யனார்
அம்மன் பூர்ணா, புஷ்கலா
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வெகு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு இருந்து வந்தாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலும் அந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டது தான்.

பராக்கிரம பாண்டியன் என்பவனது ஆட்சியில் நாட்டின் மேற்குப்பகுதியான இந்த அய்யனார் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அவனை விரட்டியடிக்க பாண்டிய மன்னன், சின்னையா தேவன் என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். அந்த வீரர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை சென்று பந்தள மன்னனின் படைகளை விரட்டி அடித்தனர். இதன்பின் பாண்டிய மன்னனின் படைவீரர்கள் தங்களது நாடு திரும்ப அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட பாண்டிய படை வீரர்கள் தங்களை காத்து அருளும்படி அய்யனாரை வேண்டிக் கொண்டனர். அப்போது ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென கீழே விழுந்து ஆற்றை கடக்க உதவும் பாலம் போல இருந்தது. பாண்டியன் படைவீரர்களும் அந்த ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தின் மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரை காத்து பாண்டியன் படையை காத்ததால் இந்த அய்யனார் நீர் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டார்.