Monthly Archives: February 2012

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம்

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சாஸ்தாமங்கலம்
ஊர் சாத்தமங்கலம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.

அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்.

+91 93642 36976, 98941 07945

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மயிலேறும் பெருமான் சாஸ்தா
அம்மன் பாதாளகன்னியம்மன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மன். அழகான தோற்றம் கொண்ட இவரை, திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் விரும்பியுள்ளார். இதற்கு ஏழு அண்ணன் மார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துதர மறுத்தால் ஆங்கிலேயர்களின் கொடுங்கோலான ஆட்சியாளர்கள் விதிக்கும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் உணர்ந்தனர். இதனால் ஏழு அண்ணன் மார்களும் ஆலோசித்து, நளங்குடியில் எழுந்தருளியுள்ள தங்கள் குல தெய்வமான மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில் சன்னதி அருகில் பெரிய அளவிலான குழி தோண்டி உயிருடன் தங்கை கன்னியம்மனைப் பூமியில் இறக்கினர். இறக்கப்பட்ட இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக பாதாள கன்னி அம்மன் என்ற பெயரில் கோயில் கட்டி வழிபாடும் நடத்தினர். தற்போதும் மயிலேறும் பெருமான் சாஸ்தா சன்னதி அருகில் உள்ள பாதாள கன்னியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது.

மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்களும், முருகன் வேடத்தில் சாஸ்தா அமர்ந்திருப்பதால் சைவமாக சுடலையும் எழுந்தருளியுள்ளார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரியவரவில்லை.