Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து செல்லலாம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம். ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.

அக்காலத்தில் இது போன்ற உள்ளடங்கிய கிராமங்களில் சாலை வசதிகள் மிகக் குறைவாக இருந்த நிலையில் எப்படித்தான் இது போன்ற அழகிய திருக்கோயில்களைக் கட்டினார்களோ என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது. கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)

தாயார் : ஸ்ரீ வேதநாயகி.

தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்

சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயனதிருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர்

அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்

திறக்கும் நேரம்: காலை 8 – 12மணி, மாலை 4 – 8 மணி.

முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், இங்கு கோயில் எழுப்பினர். நாளடைவில் இந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால், “சுந்தர வரதராஜர்என்று அழைக்கப்படுகிறார்.

பெருமாள் எதிரே, கருடாழ்வார் வணங்கியபடிதான் பார்த்திருப்பீர்கள். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் அவர் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.