Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம்

அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம், தூசி போஸ்ட், மாமண்டூர் வழி, திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 44- 2724 20158, 99432 – 95467 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர்
அம்மன் இறையார்வளையம்மை
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குரங்கணின் முட்டம்
ஊர் குரங்கணில்முட்டம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே, அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியைச் சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன், “பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும்என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம்(காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால், தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்எனக் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம்என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு, திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4182 – 247 411 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம் பனை
தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு
ஊர் திருப்பனங்காடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே, சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது, அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக, சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது, வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம், வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு இலிங்கத்தைக் காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் இலிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால், அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன், தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. (இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது). அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால், அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன், அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன், அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர்” (தாளம் என்றால் பனை என்றும் பொருள் உண்டு) என்று பெயர் பெற்றார்.

இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், “கிருபாபுரீஸ்வரராகசதுர பீடத்தில் அருளுகிறார். தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர். இவர்களில் அகத்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார். கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது. இருவரும் தனித்தனியே கஜபிருஷ்ட விமானத்தின் கீழே இருக்கின்றனர். தாளபுரீஸ்வரரின் கருவறைச் சுவரில் இலிங்கோத்பவர், துர்க்கை அம்மனும், கிருபாபுரீஸ்வரர் கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, இடது புறத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது. இருவருக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர். இதில் பிரதான அம்பாள் அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர்.