அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு, திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4182 – 247 411 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம் பனை
தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு
ஊர் திருப்பனங்காடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே, சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது, அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக, சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது, வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம், வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு இலிங்கத்தைக் காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் இலிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால், அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன், தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. (இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது). அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால், அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன், அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன், அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர்” (தாளம் என்றால் பனை என்றும் பொருள் உண்டு) என்று பெயர் பெற்றார்.

இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், “கிருபாபுரீஸ்வரராகசதுர பீடத்தில் அருளுகிறார். தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர். இவர்களில் அகத்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார். கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது. இருவரும் தனித்தனியே கஜபிருஷ்ட விமானத்தின் கீழே இருக்கின்றனர். தாளபுரீஸ்வரரின் கருவறைச் சுவரில் இலிங்கோத்பவர், துர்க்கை அம்மனும், கிருபாபுரீஸ்வரர் கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, இடது புறத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது. இருவருக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர். இதில் பிரதான அம்பாள் அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர்.

கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்தபடி வித்தியாசமாக காட்சி தருகிறார். இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது. பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு இடப்புறத்தில் நாகதேவதையும், வலப்புறத்தில் மடியில் அம்பாளை வைத்தபடி மற்றோர் விநாயகரும் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியே வன்னி மரத்தின் அடியில் சனீஸ்வரர் இருக்கிறார். இவரை வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இவருக்கு அருகிலேயே வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த யோகனந்த முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சிவன் கோயிலுக்குள் செல்லும் முன்பு முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள்.

சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் அவரை மறைத்து பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர், “உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா?” என்றார். அம்முதியவர் உங்களுக்கு நீர் கிடைக்கும்என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது. வியந்த சுந்தரர் முதியவரிடம், “தாங்கள் யார்?” என்றார். அதற்கு முதியவர், “உன் திருமணத்தில் வம்பு செய்த நான், பனங்காட்டில் குடியிருப்பவன்என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்துப் பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி வம்பு செய்பவன், கள்ளன்என்று அவரை உரிமையுடன் திட்டி, பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தத்தை சுந்தரர் தீர்த்தம்என்கின்றனர். மாசி மாத பிரம்மோற்ஸவத்தின் போது இத்தீர்த்தத்தில் கட்டமுது படைக்கும் விழா நடக்கிறது. இத்தலத்தின் தல விநாயகர் பெரிய விநாயகர் என அழைக்கப்படுகிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம். இக்கோயிலில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது.

பிரகாரத்தில் நடராஜர், திருப்பதி வெங்கடாஜலபதி, மீனாட்சி சொக்கநாதர், மகாலிங்கம் ஆகியோரும் இருக்கின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள். கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.

தேவாரப்பதிகம்:

வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலையைப் பஞ்சிச் சீறடியாளைப் பாகம்வைத்து உகந்தானை மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்ச்தது எங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 9வது தலம்.

திருவிழா:

மாசியில் தாளபுரீஸ்வரருக்கு 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. தலவிருட்சத்தைச் சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *