அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம்

அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம், தூசி போஸ்ட், மாமண்டூர் வழி, திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 44- 2724 20158, 99432 – 95467 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர்
அம்மன் இறையார்வளையம்மை
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குரங்கணின் முட்டம்
ஊர் குரங்கணில்முட்டம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே, அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியைச் சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன், “பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும்என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம்(காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால், தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்எனக் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம்என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.

சுவாமி சுயும்பு இலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது, அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு கொய்யா மலர் நாதர்” (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு.

இங்குள்ள அம்பாள் பெயர் இறையார்வளையம்மை.” இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு, அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர். சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு.

சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன், தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். இத்தீர்த்தத்தை, “காக்கைமடு தீர்த்தம்,” “வாயசை தீர்த்தம்என்கின்றனர். எமன், சனீஸ்வரருக்கு அதிபதி. எனவே, சனி தோஷங்கள் நீங்க எமன் வழிபட்ட வாலீஸ்வரரையும், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரையும் வழிபடலாம்.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, “குரங்கணின்முட்டம்என்றும், “பறவா வகை வீடு” (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி, பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள். பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், சப்தமாதர், நாகதேவதை ஆகியோர் இருக்கின்றனர். கருவறைக்கு பின்புறத்தில் மகாவிஷ்ணு, பிரயோக சக்கரத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு வாலீஸ்வரர் சுயும்பு இலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும்.

தேவார பதிகம்:

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் கோலப் பொழில் சூழ் குரங்கணில் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தொண்டை நாட்டுத் தலங்களில் இது 6வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகையில் லட்சதீபம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்.

பிரார்த்தனை:

பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் அம்பிகைக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர். வாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் குறைவில்லாத வாழ்வும், பிறப்பில்லாத நிலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளுக்கு குணமாக அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சுவாமிக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *