Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், நாலூர் மயானம், திருச்சேறை, திருமெய்ஞானம்

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், நாலூர் மயானம், திருச்சேறை, திருமெய்ஞானம்குடவாசல் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94439 59839 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
அம்மன் ஞானாம்பிகை, பெரிய நாயகி
தல விருட்சம் பலாசு, வில்வம்
தீர்த்தம் ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர்
ஊர் திருமெய்ஞானம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் நால்வேதியூர்என்று வழங்க தொடங்கி, “நாலூர்என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க, இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று. மற்ற மூன்றும் கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பவை.

சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை. இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435-246 8001 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்மன் ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் மாவிலங்கை
தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் உடையார் கோயில்
ஊர் திருச்சேறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு இலிங்கம் தாபித்து, வணங்கி வந்தார். அந்த இலிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

(ரிணகடன், விமோசனம் நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும், வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர்ஆகும். இவரை, 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.