அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435-246 8001 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்மன் ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் மாவிலங்கை
தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் உடையார் கோயில்
ஊர் திருச்சேறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு இலிங்கம் தாபித்து, வணங்கி வந்தார். அந்த இலிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

(ரிணகடன், விமோசனம் நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும், வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர்ஆகும். இவரை, 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.

மனிதனுக்கு செம்மை தரும் நெறியை முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு செந்நெறியப்பர்என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால், இறைவன் செந்நெறியப்பரையும், “சாரபரமேஸ்வர்என அழைக்கலாயினர்.

இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும்.

நவக்கிரகத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். அப்பரால் பாடல் பெற்றவர். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ள பைரவர் வேறு எங்கும் இல்லாதது தனி சிறப்பாகும்.

விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகியன கிட்டுகிறது என்கின்றனர்.

தக்கன் யாகத்தில், தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான். அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இவ்வூர் ஆற்றூர், ஆறை என மருவி வழங்குதல் போல, சேற்றூர் என்ற பெயர் சேறை என வழங்கியது எனலாம். தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற வளநகர் என இத்தலத்தை குறிக்கப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் ஞானவல்லி அம்பாள். உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன இலிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும். இவருக்கு அடுத்து பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.

தேவாரப்பதிகம்:

துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமா இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர் செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 95வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

கடன், பிணி தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *