Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில் (பரிதி நியமம்), ஒரத்தநாடு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4372-256 910 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர், பரிதீசர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் அரசு
தீர்த்தம் சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பரிதிநியமம், திருப்பரிதி நியமம்
ஊர் பரிதியப்பர்கோவில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர்

பரிதி என்று அழைக்கப்படும் சூரியன், கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னைக் காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர்என அழைக்கப்படுகிறார்.


இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. இராமபிரானின் முன்னோர்களான சூரிய குலத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களைத் தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான். குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம், பூமிக்குள் இருந்த, சூரியனால் அமைக்கப்பட்ட இலிங்கத்தின் மீது பட்டது. உடனே இலிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தைத் தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய இலிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது. இலிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான்.

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91-4374-316 911, 4374-275 441

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாட்சிநாதர்
அம்மன் சவுந்தர நாயகி
தல விருட்சம் பாதிரி
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சாட்சிநாதபுரம்
ஊர் அவளிவணல்லூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

இத்தல இறைவனைப் பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களைத் தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது, சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளைத் தன் மனைவியாக நினைத்து அழைத்தார். அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையைக் கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து அவள் தான் இவள்என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர்எனவும், இறைவன் சாட்சிநாதர்எனவும் ஆனார்கள்.

மூலஸ்தானத்தில் சிவன் இரிடபாரூடராய்க் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து, செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில், தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார். சிவனின் பஞ்ச ஆரண்யம் (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.