Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை, மதுரை மாவட்டம்
******************************************************************************************************
+91 99409 46092, 97897 91349(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – அரசமரம், வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மதுரை எல்லீஸ் நகர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன் காடாக இருந்த இப்பகுதியில் தானாக கிடைத்த சூலாயுதத்தை வைத்து மக்கள் சில காலம் வழிபட்டு வந்தனர்.

பின் சுயம்புவாக கிடைத்த மார்பளவு கருமாரி சிலையை வைத்து அதை மூலவராக வழிபாடு செய்து வருகிறார்கள்.

இங்கு கோயிலுக்கு முன்னும், பின்னும் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்து வருகின்றன. இதில் கோயிலின் முன் அம்மனின் பார்வையில் உள்ளதில் வேப்பமரம் பெரியதாகவும் அரசமரம் சிறியதாகவும் வளர்ந்துள்ளது. அதே போல் கோயிலின் பின் உள்ளதில் அரசு பெரியதாகவும் வேம்பு சிறியதாகவும் வளர்ந்துள்ளது.

கிழக்கு பார்த்த இச்சன்னதியில் ஐம்பொன்னில் அமைந்திருக்கும் உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் வெவ்வேறு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

மங்கையர் மனம் கலங்கினால் இந்த மகமாயிக்கு மனம் தாங்காது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே நமது தேவையறிந்து கொடுத்து காத்திடுவாள் தேவி கருமாரி.

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம்

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம் – 638001, ஈரோடு மாவட்டம்.
**********************************************************************************************************
+91-424 – 2430114 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – சின்ன மாரியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம், அரசமரம்

பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – கருங்கல்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

வீட்டில் குழந்தைகள் கடவுள் பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அதுபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமிகள் விளையாடிய இடம் ஒரு கோயிலாக மாறி விட்டது. இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால், சின்ன மாரியம்மன் கோயில் எனப் பெயர் பெற்றது. இந்த கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது.

இந்த கோயிலின் வாசலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.

திருமுகன்பூண்டியில் இருந்து அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு கடந்த 1989ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.