அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம், திருச்சி மாவட்டம்.

+91 4326 275 210, 275 310, 94863 04251

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மதியம் 12.30 மணி, மாலை 4 இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடாஜலபதி

உற்சவர்

ஸ்ரீனிவாசர்

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

காவிரி, பாபவிநாசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மசக்கரபட்டணம்

ஊர்

குணசீலம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆசிரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காகத் தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம்என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். “பிரசன்ன வெங்கடாஜலபதிஎனப் பெயர் சூட்டப்பட்டது.

கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

அருள்மிகு தசாவதாரக் கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு தசாவதாரக் கோயில், ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆற்றங்கரை, திருச்சி மாவட்டம்.

+91-431- 243 59 05 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன

உற்சவர்

லட்சுமி நாராயணர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீரங்கம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையால் இன்பம் ஊட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிறார். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் இராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.

ஸ்ரீஅகோபில மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயில் மூலஸ்தானத்தில், மச்சா, கூர்மா, வராக, நரசிம்மா ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்குசக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், இராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் சேனாதிபதி விஸ்வக்சேனர் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.