அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம்

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம், ராமநாதபுரம் மாவட்டம்.

நீராடல் : எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்

மூலவர் நவகிரகங்கள்
தீர்த்தம் கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவிப்பூர் (தேவிபுரம்)
ஊர் தேவிபட்டிணம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன், தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டிணத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்காரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டிணமாக வழங்கிவருகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் இராவணன். ஆனால் இராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே இராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது. இராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த இராமன் சீதையை மீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி இராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்தார். இராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணல் எடுத்து, நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. இராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக் குளம் அருகில், திருச்சி, திருச்சி மாவட்டம்.

+91 431 270 4621 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நந்தீஸ்வரர்
தலவிருட்சம் வில்வம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் திரிசிராமலை
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோயிலாகும். இந்தக் கோயில் பற்றி ஒரு சிலரது கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது தாயுமான சுவாமியின் அதிகார நந்தியாக இருந்தது. காலப்போக்கில் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால், நந்தி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது. அதுவே தனிக்கோயில் போலத் தோற்றமளிக்கிறது என்கின்றனர். தற்போது நந்திக்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகிறது. இங்குள்ள நந்தி ஏழு அடி உயரமும், பத்து அடி நீளமும், 16 அடி சுற்றளவும் கொண்டது. பிரதோஷ காலங்களில் சந்தனக்காப்பு உட்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் துயர் துடைக்க இங்கு வருகின்றனர். நந்திக்கு பின்புறம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 அடி உயரத்தில் கல் கொடிமரம் உள்ளது. இதன் மேலும் ஒரு நந்தி சிலை இருக்கிறது. நந்திக்கு பூஜையை தொடர்ந்து இந்த கொடி மரத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது. கொடிமரத்தின் அடியில் செவ்வந்திநாதர் என்றழைக்கப்படும் செவ்வந்தி விநாயகர் சன்னதி மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். அருகில் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோயிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது.