Monthly Archives: December 2011

அருள்மிகு மனத்துணை நாதர்(இருதய கமலநாதேஸ்வரர்) திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணை நாதர்(இருதய கமலநாதேஸ்வரர்) திருக்கோயில், வலிவலம், திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4366 – 205 636 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மனத்துணைநாதர் ( இருதய கமலநாதர்)
அம்மன் மாழையொண்கண்ணி (மத்யாயதாட்சி)
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலிவலம்
ஊர் வலிவலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முன்னொரு காலத்தில் ஒழுக்க சீலனாக விளங்கிய ஒருவன், முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான். இதனால் அவன் அடுத்த பிறவியில் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது. மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் இரத்தம் வந்தது. இரத்த காயமடைந்த குருவி அருகிலிருந்த மரத்தில் தஞ்சம் அடைந்தது. அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசங்களை தற்செயலாக கரிக்குருவியும் கேட்டது. “அன்பர்களே! சிவத்தலங்களில் சிறந்தது மதுரை. தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை. மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் உலகில் வேறொன்றும் இல்லை. சோமசுந்தரக்கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளித்தருபவர்என்று யோகி சொல்லிக்கொடுத்ததை கரிக்குருவி கேட்டது. ஞானம் பெற்றது. பின்னர் தனது முன்பிறப்பையும், தான் ஏன் கரிக்குருவியாக பிறந்தோம் என்பதை அறிந்து மதுரையை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்த குருவி சோமசுந்தரர் கோயிலை வலம் வந்து பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. சிவனை உருகி வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தது. குருவியின் பூஜைக்கு இறைவன் மகிழ்ந்தார். குருவியை அழைத்து அதற்கு மிருத்தியுஞ்சயமந்திரத்தை உபதேசித்தார். கரிக்குருவியின் சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்றது. மேலும் குருவி சிவனிடம்,”இறைவா! நான் உனது கருணையால் நான் ஞானம் பெற்றேன். இருந்தாலும் ஒரு குறை உள்ளது. மிகச்சிறிய பறவையாகிய நான் மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகின்றேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்என முறையிட்டது. அதற்கு சிவபெருமான்,”எல்லாப் பறவைகளை விட நீ வலிமை அடைவாய்எனக் கூறினார். மீண்டும் குருவி,”சிவபெருமானே! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் வரும் அனைவருக்கும் வலிமையை தந்தருள வேண்டும்என வேண்டியது. இறைவனும் அவ்வாறே அருளினார். இவ்வாறு வரம்பெற்ற கரிக்குருவி வலியான்என்னும் பெயரையும் பெற்றது. இக்குருவியின் மரபில் தோன்றிய ஒரு குருவி இத்தலம் வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. இதனால் இத்தலத்திற்கு வலிவலம்என்ற பெயர் ஏற்பட்டது. இத்தல விநாயகர் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 245 452, 245 350 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)
அம்மன் சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தல விருட்சம் மல்லிகை
தீர்த்தம் க்ஷீர புஷ்கரணி, பாற்குளம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மல்லிகாரண்யம், திருச்சிக்கல்
ஊர் சிக்கல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவைப் புலியாக மாறும்படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.

மனமிறங்கிய சிவன்,”பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் பாற்குளம்ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் வெண்ணெய் நாதர்ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் சிக்கல்என்றழைக்கப்பட்டது. ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் கோலவாமனப்பெருமாள்என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.