அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 245 452, 245 350 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)
அம்மன் சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தல விருட்சம் மல்லிகை
தீர்த்தம் க்ஷீர புஷ்கரணி, பாற்குளம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மல்லிகாரண்யம், திருச்சிக்கல்
ஊர் சிக்கல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவைப் புலியாக மாறும்படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.

மனமிறங்கிய சிவன்,”பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் பாற்குளம்ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் வெண்ணெய் நாதர்ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் சிக்கல்என்றழைக்கப்பட்டது. ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் கோலவாமனப்பெருமாள்என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும். அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு திரி சதைசெய்து வேண்டிக்கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து, தேவர்களை காத்தார். சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு சத்ரு சம்ஹார திரி சதைஅர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை. இத்ததல விநாயகர், “சுந்தர கணபதிஎன்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டன என்பர். கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணிஎன்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிங்காரவேலர் வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாமாம். திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர், இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் இதுதான்.

இதன் இராஜகோபுரம் 7 நிலைகளை உடையது. அதன் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபாணியும் காட்சி தருகின்றனர். இரண்டாவது சுற்றில் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயிலின் மையத்தில் உயரமான படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீதநாதர் இலிங்க வடிவில் அருள்புரியும் சந்நிதியும் சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகபெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கட்டுமலையின் கீழ்பக்கம் இறைவி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரத்தை சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது.

தேவாரப்பதிகம்:

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம்.

திருவிழா:

சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி.

பிரார்த்தனை:

கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

வழிகாட்டி:

நாகப்பட்டினத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *