Category Archives: சிவ ஆலயங்கள்

வில்வவனநாதர் திருக்கோயில், கடயம்

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில், கடயம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, திருநெல்வேலி மாவட்டம்.

+91 4634 241 384, 240 385. 94430 03562

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வவனநாதர்
அம்மன் நித்ய கல்யாணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் இராம நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கடையம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

காபிலோ புராணத்தில் இத்தலத்தின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் தென்னகத்துக்கு வந்து, அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை அவர் வணங்கினார். அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார். அயோத்தியில் இராமராஜ்யம் நடந்த போது, அகால மரணமே யாருக்கும் ஏற்படவில்லை. இதைக்கண்டு பொறாமைப்பட்ட சம்புகன் என்ற கொடியவன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டித் தவம் செய்தான். அவனை இராமபிரான் கொன்றுவிட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். இராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு இராம நதிஎன்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பவித்ரமான இந்த நதி செல்லும் இடங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை கூட மணல்வெளியாக காட்சியளித்தன. இப்போது புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த நதியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, இதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, கோவை மாவட்டம்.

+91- 0422 – 2396821

காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் வில்லீஸ்வரர், வில்லீஸ்வர பரமுடையார்
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இருகரை
ஊர் இடிகரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகாற்சோழமன்னன் தனது நாடு சிறக்கவும், தனக்கு ஏற்பட்ட புத்திரதோசம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் ஆலோசனையின் படி, கொங்குநாட்டில் காடு திருத்தி, குளங்கள் வெட்டி 36 சிவ ஆலயங்களை கட்டினான். அவ்வாறு கோயில்கள் கட்டியபோது 29 வது கோயிலை, வில்வமரங்கள் நிறைந்து, வனமாக இருந்த இவ்விடத்தில் எழுப்பிட எண்ணினான். எனவே, இவ்விடத்தில் கோயிலை அமைக்க வில்வமரங்களை வெட்டி காடுகளைத் திருத்தினான். அப்போது அங்கு காவல் தெய்வமாக இருந்த துர்க்கை பத்திரகாளியம்மன், தனக்கு பலி கொடுத்து விட்டு, பின் ஆலயம் எழுப்பும்படி கூறினாள். அதற்கு ஒப்புக்கொண்ட மன்னர் சிவாலயம் கட்டி முடித்த பின் துர்க்கைக்கு தனியே கோவில் ஒன்றை எழுப்புவதாக கூறி, மீண்டும் காடுகளைச் சீரமைத்தான். அப்போது, அவ்விடத்தில் மண்ணில் இருந்து சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதனையே இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்த மன்னன் சிவனுக்கு கோயிலை எழுப்பி வழிபட்டார். அதன்பின், ஊருக்கு எல்லையில் வில்லிதுர்க்கை பத்திரகாளிக்கு கோழி, ஆடு, பன்றி என முப்பலி கொடுத்துவிட்டு, தனியே மற்றோர் கோயிலையும் எழுப்பினார்.