Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, மணல்மேடு, மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-92456 19738 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர்
அம்மன் அமிர்தவல்லி, மங்களாம்பிகை
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பிரம்ம, அமிர்த தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழமண்ணிப்படிக்கரை, மதூகவனம்
ஊர் இலுப்பைபட்டு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் இலிங்கம் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி, சிவனை மமனதில் எண்ணி வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாகக் காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து இலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.

தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களைக் காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார்.

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364 – 254 879, 98425 38954 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி
தல விருட்சம் வாகை
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர் திருவாளப்புத்தூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், திருஞானசம்பந்தர்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாகப் பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. எனவே, சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி, இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டிப் பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில், இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருசமயம் அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது, தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. எனவே, ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம், தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து, அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன், தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டுத் திரும்பியபோது, முதியவரைக் காணவில்லை. அவன் தேடியபோது, பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது, சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான்.

உருதுகேதன் எனும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர்என்று பெயர் வந்தது. மாணிக்கக் கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம், “வாளொளிப்புற்றூர்என்று பெயர் பெற்றது.
அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயரில் அழைக்கின்றனர்.
இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள இலிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கிறார். கஜலட்சுமி, சரசுவதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது. இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.