அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364 – 254 879, 98425 38954 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி
தல விருட்சம் வாகை
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர் திருவாளப்புத்தூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், திருஞானசம்பந்தர்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாகப் பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. எனவே, சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி, இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டிப் பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில், இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருசமயம் அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது, தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. எனவே, ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம், தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து, அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன், தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டுத் திரும்பியபோது, முதியவரைக் காணவில்லை. அவன் தேடியபோது, பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது, சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான்.

உருதுகேதன் எனும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர்என்று பெயர் வந்தது. மாணிக்கக் கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம், “வாளொளிப்புற்றூர்என்று பெயர் பெற்றது.
அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயரில் அழைக்கின்றனர்.
இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள இலிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கிறார். கஜலட்சுமி, சரசுவதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது. இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.

தலவிநாயகர்: நிருதி விநாயகர். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம். இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேஷ பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

தேவாரப்பதிகம்:

சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார் ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார் தோகைமாமயிலனைய துடியிடை பாகமும் உடையார் வாகைநுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர்உளாரே.”

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.

பிரார்த்தனை:

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள். ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *