Category Archives: பாடல் பெற்றவை

மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம்

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம், தியாகவல்லி, கடலூர் மாவட்டம்.

+91-94425 85845

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
உற்சவர் சோபுரநாதர்
அம்மன் தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் வங்கக் கடல், கிணற்று தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சோபுரம், தியாகவல்லி
ஊர் திருச்சோபுரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த, தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் இலிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் இலிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகைச் செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் இலிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் இலிங்கமாகக் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். இலிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம்.

+91-94434 34024

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சென்றால் சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர்
அம்மன் ஒப்பிலாநாயகி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஜாம்புவ தடாகம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்திணை நகர்
ஊர் தீர்த்தனகிரி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர்

முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம்,”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம்,”ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி?” என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.