சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம்.

+91-94434 34024

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சென்றால் சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர்
அம்மன் ஒப்பிலாநாயகி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஜாம்புவ தடாகம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்திணை நகர்
ஊர் தீர்த்தனகிரி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர்

முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம்,”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம்,”ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி?” என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் வித்தியாசமாகக் காட்சி தருகிறார். இவரது காலுக்கு கீழே முயலகனும் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியர்கள் உணவு படைத்தபோது, சிவன் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டாராம். இதன் அடிப்படையில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு சிவன், சுயம்புலிங்கமாக சதுரவடிவ பீடத்துடன் காட்சி தருகிறார். சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவளை கருந்தடங்கன்னி,” “நீலதாம்பிகைஎன்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். சுந்தரர் அம்பாளைக்குறித்தும் பதிகம் பாடியிருக்கிறார். முன்பு சிவனுக்கு தினமும் திணைப்பயிரை நைவேத்யமாக படைக்கும் வழக்கம் இருந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பழக்கம் நடைமுறையில் இல்லை. திணைப்பயிரை விளையச்செய்த தலம் என்பதால் இவ்வூருக்கு, “திருத்திணைஎன்று பெயர். சிவன் பணியாளாக வந்து வேலை செய்த தலம் என்பதால், இங்கு திணைப்பயிர் நைவேத்யம் செய்து வழிபட்டால் பணிஉயர்வு கிடைக்கும் என்கிறார்கள். சிவனது உதவியாளராக இருந்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யும் சண்டிகேஸ்வரர் பல கோயில்களில் தனித்துதான் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மனைவி சண்டிகேஸ்வரியுடன் இருக்கிறார். இவர், தன் பணிக்கு உதவியாக மனைவியை வைத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

இங்கு கோயிலுக்கு வெளியே ஜாம்புவ தடாகம்என்னும் தீர்த்தம் உள்ளது. முன்வினைப் பயனால் ஜாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாராம். இதனால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் நீராடி சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்கிறார்கள். கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது.

இத்தலத்தின் தலவிநாயகர்வலம்புரிவிநாயகர். கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது.

தேவாரப்பதிகம்:

ஒன்றலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்தரு மாநிதி இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யெனவே நினை உளமே குன்று லாவிய புயமுடை யானைக் கூத்தனைக் குலாவிக் குவலயத்தோர் சென்றெலாம் பயில் திருத்தினைநகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 5வது தலம்.

திருவிழா:

வைகாசியில் 13 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம்.

கோரிக்கைகள்:

விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள் இறைவனுக்கும்அம்மனுக்கும்திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ்வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *