Category Archives: பாடல் பெற்றவை

வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேசுவரர்
உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி
அம்மன் பெரியநாயகி, சிவானந்த வல்லி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பார்வதி ஈசனின் இரு(சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து, அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி, போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி ரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் இரத்தத்துளிகளை, கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட இரத்தம், இரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில், சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருக்க செய்கிறார். பின்னர், அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார்.

இதையே, இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும், திருக்கோயிலூரை ஆண்ட தெய்வீக மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.

சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை

அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை, விழுப்புரம் மாவட்டம்.

+91-4149-291 786, 9486282952

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கோயில் அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால் எந்த நேரத்தில் சென்றாலும் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

மூலவர் சொர்ணகடேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் நீலமலர்க்கண்ணி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் கிணற்று தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நெல்வெண்ணெய்
ஊர் நெய்வணை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து, விவசாயம் கொழிக்கும் இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக, குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய சிவன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

அவர் வருணனிடம் சொல்லி, இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள், தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரில் இருந்த அனைத்து குளம், ஏரிகளும் நிரம்பி வழிந்தது. அப்போது ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் பாய்ந்தது. அதுவரையில் இறை வழிபாட்டை மறந்திருந்த மக்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். மனம் இரங்கிய சிவன், ஒரு வாலிபர் வடிவில் வந்தார். ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளைத் தரும்படி கூறினார். அவர்களும் எடுத்து கொள்ளும்படி சொல்லவே, அவர் நெல்மூடைகளைத் தூக்கி வந்து ஏரியில் அணையாக கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருணபகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே, அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடமைகள், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள், உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் வாலிபனிடம், “நீ தான் எங்கள் தெய்வம்என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர். அவர்களிடம், சிவன், “உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம். எனவே, எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள்என்று சொல்லி, அனைவருக்கும் சொர்ணம் (தங்கம்) நிரம்பிய குடங்களை கொடுத்துவிட்டு, “இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள்என்று சொல்லி மறைந்து விட்டார். மக்கள் புரியாமல் தவிக்கவே, அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின் மக்கள் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால், “சொர்ணகடேஸ்வரர்என்று பெயர்பெற்றார். இவருக்கு நெல்வெண்ணெய்நாதர்என்ற பெயரும் உண்டு.