Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்.

+91- 4147 – 235 472 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரசலீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் வாமன தீர்த்தம்
ஆகமம் காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅரசிலி, ஒழிந்தியாப்பட்டு
ஊர் ஒழிந்தியாம்பட்டு
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வாமதேவர் எனும் முனிவர், தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தது. “உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே; இங்கு சிவன் இருந்தால் எப்படி இருக்கும்?” என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலிஎன்றும், சுவாமிக்கு அரசலீஸ்வரர்என்றும் பெயர் ஏற்பட்டது.

பல்லாண்டுகளுக்கு பிறகு இத்தலத்தில் இருந்த இலிங்கம் மறைந்து விட்டது. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, ஒரு நந்தவனம் அமைத்து, அதன் அருகிலுள்ள மற்றொரு சிவனுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது, அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலைக் கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக்கண்ட மன்னன் கோபத்துடன், மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிடவே, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது, அங்கு மான் இல்லை. அதற்கு பதில் இலிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) இருந்தது. அதன் தலையில் இரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்குப் புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.

சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை

அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்.

+91 – 413 2688949

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான்
அம்மன் அமிர்தாம்பிகை, அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சூரியபுஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வக்ராபுரி
ஊர் திருவக்கரை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, காளி சம்காரம் செய்யும்போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையைக் காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து. இடது பாதத்தில் ஸ்ரீசக்ர ராஜ இயந்திரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இராகு, கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால், வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.