அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்.

+91- 4147 – 235 472 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரசலீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் வாமன தீர்த்தம்
ஆகமம் காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅரசிலி, ஒழிந்தியாப்பட்டு
ஊர் ஒழிந்தியாம்பட்டு
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வாமதேவர் எனும் முனிவர், தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தது. “உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே; இங்கு சிவன் இருந்தால் எப்படி இருக்கும்?” என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலிஎன்றும், சுவாமிக்கு அரசலீஸ்வரர்என்றும் பெயர் ஏற்பட்டது.

பல்லாண்டுகளுக்கு பிறகு இத்தலத்தில் இருந்த இலிங்கம் மறைந்து விட்டது. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, ஒரு நந்தவனம் அமைத்து, அதன் அருகிலுள்ள மற்றொரு சிவனுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது, அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலைக் கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக்கண்ட மன்னன் கோபத்துடன், மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிடவே, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது, அங்கு மான் இல்லை. அதற்கு பதில் இலிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) இருந்தது. அதன் தலையில் இரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்குப் புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.

தெட்சிணாமூர்த்தி கோஷ்ட சுவரில் இருக்கிறார். பொதுவாக வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு, இடது பக்கம் திரும்பி, கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பாகும். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி எப்போதும் அமைதியாக இருப்பவர். நடராஜரோ ஆடிக்கொண்டிருப்பவர். இவர் தெட்சிணாமூர்த்திக்கு மேலே இருக்கிறார். மனிதர்கள் வாழ்க்கையில் ஆனந்தமாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆனந்தத்தையும், அமைதியாக இருக்க வேண்டிய சமயத்தில் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த வடிவம் உணர்த்துவதாகச் சொல்கின்றனர். ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தையும், தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், பைரவர், நால்வர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது.

இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு இலிங்க வடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். இலிங்கத்தின் தலையில் அம்புபட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இலிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். திருஞானசம்பந்தர் இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு, பதிகங்கள் பாடியிருக்கிறார். அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறாள்.

தேவாரப்பதிகம்:

மிக்க காலனை வீட்டி மெய்கடக் காமனை விழித்துப் புக்கவூர் இடு பிச்சை உண்பது பொன்திகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந்து ஆமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலம்.

திருவிழா:

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோத்சவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

அரசமர இலையால், சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், இழந்த பதவிகள் திரும்பக் கிடைக்கும், பதவி உயர்வு உண்டாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *