Category Archives: பாடல் பெற்றவை

அமிர்தகடேஸ்வரர் கோயில், மேலக்கடம்பூர், சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயில், மேலக்கடம்பூர், சாக்கோட்டை, கடலூர் மாவட்டம்.

+91- 435-2414 453, 98653 06840

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்
உற்சவர் அமிர்தகலசநாதர்
அம்மன் அமிர்தவல்லி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் நால்வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கலயநல்லூர்
ஊர் மேலக்கடம்பூர், சாக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர்

காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவசிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு இலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். இலிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து நமசிவாயமந்திரத்தை உச்சரித்து இலிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் இலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.

உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர்ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.

சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர்

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர், காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம்.

+91- 94425 71039

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் செங்கழுநீர் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநாரையூர்
ஊர் திருநாரையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம், “தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்குத் தீர்த்தம் கொண்டு வந்து, தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும்என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

நம்பியாண்டார் நம்பயின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்குத் தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பிள்ளையாரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.