Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில், கனகபுரி

அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில் கனகபுரி – 520 001. விஜயவாடா மாவட்டம். ஆந்திரா மாநிலம்
*****************************************************************************************************

+91 866 2423600 2425 744 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கனகதுர்கேசுவரி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – பெஜ்ஜவாடா, பிஜபுரி

ஊர்: – கனகபுரி, இந்திரகிலபர்வதம்

மாவட்டம்: – விஜயவாடா

மாநிலம்: – ஆந்திரா

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வருகை தந்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேசுவரர்.

கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டித் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றாள். அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள்.துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலைமீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். இந்த மலை மீது கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போன்று, அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச்செய்து அத்தலத்தைச் செழிப்பாக்கினாள். அன்று முதல் கனக துர்கா என்ற பெயரில் தேவர்கள் அவளைப் பூசித்து வந்தனர். இத்தலத்தின் புனிதத்தை அதிகரிக்க அசுவமேத யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இத்தலத்தில், சிவலிங்கம் பிரதிட்டை செய்தார். அருச்சுனன் இத்தலத்தில் தவம் செய்து, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில்

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில் -608 301. கடலூர் மாவட்டம்
***************************************************************************************************

+91- 99424 44928 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை, பூங்குறத்தியம்மை

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காட்டுமன்னார் கோவில்

மாவட்டம்: – கடலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சோழர்கள் தங்கள் குலதெய்வமாக அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்தனர். இவர்களில், முதலாம் விக்கிரமசோழன் காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிசசேகர பாண்டியன் மீது படையெடுத்தான்.

பாண்டியனுக்கோ போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவ பக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி சொக்கநாதரிடம் வேண்டினான்.

மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், குறவனாக வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான்.

சிவன் அவனுக்கு காட்சி தந்து, “மண்ணாசை கொண்டு செய்யப்படும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும். அதை விடுத்து வேறொரு நன்மையும் உண்டாகாது,” என உபதேசம் செய்து, “மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்என ஆசீர்வதித்து மறைந்தார்.

இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரமசோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்டான்.

மன்னனின் பங்காளிகள், இவனது ஆட்சிக்கு தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம்,”தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்யச் சென்றபோது, சிவனே குறவனாக வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டார். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்,” என வேண்டினான்.