அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம்

அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்ம சாஸ்தா

தல விருட்சம்

இலுப்பை மரம்

தீர்த்தம்

சரப தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அங்கமங்கலம்

மாவட்டம்

தூத்துக்குடி

மாநிலம்

தமிழ்நாடு

மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி, தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார். அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார். நரசிம்மரின் தோற்றத்திற்குக் காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை. நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன. அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது இக்கோயிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, இலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார். இதனால் இவ்வூரில் உள்ள இலிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும், இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோயில் கோயில் என்றும் பெயர் பெற்றது.

அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர்

அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91 44 28152533, 9840053289, 9940053289

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பரமசுந்தரர்

அம்மன்

பரமேஸ்வரி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

நன்னிலம்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைச் சுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும் வந்ததாகவும், அவருடைய தல வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை.

கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம். ஆனால் பாம்புகள் கடிப்பதோ, கஷ்டமோ கொடுப்பதில்லை.