பிரணவ மந்திர வைணவக் கோயில்

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்துதான் ஓம். (அ+உ+ம = ஓம்).

ஆண்டாள் சந்நிதி அகாரம்.
பெருமாள் சந்நிதி உகாரம்.
பெரியாழ்வார் சந்நிதி மகாரம்.
இவை மூன்றும் சேர்ந்தால் ஓம் எனும் பிரணவம் கிட்டும்

புவன ஈசுவரி கோயில்-ஐயப்பன் நகர்

உலக நாயகியான புவன ஈசுவரி பல இடங்களில் கோயில் கொண்டு அருள் பாலித்துக் கொண்டுள்ளாள்.

திருச்சி மத்திய பேருந்து நிலயத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வழியில் 5 கல் தொலைவில் உள்ள அய்யப்பன் நகரில் உள்ளது இந்த திருத்தலம்.

நான்கு புறமும் சுற்று மதில். தென் புறத்தே வாயில் (வாய்+இல்). உள்ளே நுழைந்து இடது புறம் திரும்பிய பின் அன்னை காட்சி தருகிறாள்.

அருள் பொழியும் சாந்தமான முகத்துடன் அம்மை அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாம். ஒரு கரத்தில் பாசம்; இன்னொரு கரத்தில் அங்குசம்; மற்றுமிரு கரங்களிலும் வரதம், அபயம் அளித்தபடி வண்ணக் கோலத்தில் அமர்ந்துள்ளாள் அன்னை.