அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை– 625001.
***********************************************************************************************************
மதுரை மாவட்டம்.

+91 93441 18680 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சுக் குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

கோயிலின் தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

ஆறடி உயரமுள்ள இந்த அம்மனைத் தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.

இத்தலத்திற்கு சென்றால் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேசுவரர், மகாலட்சுமி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் தரிசித்து வரலாம்.

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு, கடலூர் மாவட்டம்.
**************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பச்சைவாழியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் எழுமேடு
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்திருக்க, அந்த ஊரையும் மக்களையும் காப்பதற்கு, பச்சை மரம் ஒன்றின் மீது குடியமர்ந்தாள் அம்மன். ஊர்ப் பெரியவரின் கனவில் வந்து, அம்மனே இந்தத் தகவலைச் சொல்லியருளினாளாம். விடிந்ததும் தகவலைக் கேள்விப்பட்டு ஊரே சிலிர்த்தது. அம்மனுக்கு கோயில் எழுப்பி, பச்சை நிற மேனியளாக அம்மனின் திருமேனியை பிரதிட்டை செய்து வழிபடத் துவங்கினர்.

கோயில் பிரகாரத்தில் கருப்பண்ண சாமி, கொடிமரம், குதிரை வாகனம் ஆகியவை உள்ளன. அம்மனுக்குப் பூசை செய்யும் போது, அவளுக்கு பிடித்த சிலம்பையும், உடுக்கையையும் கொண்டு இசைத்தபடியே பூசை செய்வது இக்கோயிலின் தனி சிறப்பு.

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, எழுமேடு முதலான ஊரைச் சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டில் நடக்கும் மங்கல காரியங்களுக்கு அம்மனின் உத்தரவு கேட்டே செய்கின்றனர். அம்மனின் தோளில் எலுமிச்சை பழத்தை வைத்து, செய்யப் போகும் காரியத்தை மனதில் நினைத்துக் கொள்வர். பழம் கீழே விழுந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.