அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்.

+91- 4368-221 009, 97866 35559 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பார்வதீஸ்வரர்
அம்மன் பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி)
தல விருட்சம் வில்வம், வன்னி
தீர்த்தம் சத்தி, சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தெளிசேரி
ஊர் திருத்தெளிச்சேரி, காரைக்கோயிற்பத்து
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை பாஸ்கரத்தலம்என்கின்றனர். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது பட்டு பூஜை நடக்கிறது.

பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து, இத்தல இறைவனை வழிபட்டு அவருடன் கலந்தாள். “பார்வதியம்மைஎன்றும், “சுயம்வர தபஸ்வினிஎன்றும் பெயர் பெற்று, திருமண வரம் தரும் நாயகியாக அருளுகிறாள். சிவபெருமான் இத்தலத்தில் கிராதமூர்த்திஎன்னும் பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார். திருஞான சம்பந்தர் தன் அடியார்களுடன் இப்பகுதிக்கு வந்த போது, வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் அவரைத் தடுத்தனர். இதனால் வருந்திய சம்பந்தர், இறைவனிடமே இதுபற்றி முறையிட்டு பாடினார். இறைவனின் கட்டளையால் தடுத்தவர்களின் தலையில் இடி விழுந்தது. ஆனாலும், அவர்கள் திருந்தவில்லை. “சாரிபுத்தன்என்பவரின் தலைமையில் சம்பந்தருடன் தங்கள் மதமே உயர்ந்தது என்றும், சைவம் தாழ்ந்தது என்றும் வாதிட்டனர். இதை மறுத்து சம்பந்தர் பேசி, அவர்களது வாதத்தை முறியடித்தார். பின்னர் அந்த தரப்பினரும் சைவர்களாக மாறினர்.
அம்பரீஷ ராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார். இதனால் இத்தல இறைவனுக்கு இராஜலிங்கம்என்ற பெயரும் உள்ளது. பல்குணன் வழிபட்டதால் பல்குணன்என்றும், சூரியன் வழிபட்டதால் பாஸ்கர இலிங்கம்என்றும் திருநாமங்கள் உண்டு.
இத்தலம் கிருதயுகத்தில் பிரம்மவனம் என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் என்றும், கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி.

+91- 4368 – 265 693, 265 691, 98940 51753 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
உற்சவர் வேடமூர்த்தி
அம்மன் சாந்தநாயகி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் தேவதீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புன்னகவனம்
ஊர் திருவேட்டக்குடி
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

மகாபாரதப் போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டித் தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “அர்ஜுனன் மஸ்யரேகை‘ (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.

ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், “உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதேஎன்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாகப் பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று மாப்பிள்ளை அழைப்புகொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை, “மாப்பிள்ளைஎன்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.