அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஓசூர்

அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோபசந்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடேஸ்வரர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஓசூர்

மாவட்டம்

கிருஷ்ணகிரி

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியை விஜயநகர அரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஓசூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கோட்டகுட்டா கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஆடு மேய்த்து வந்தனர். இவர்கள் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்ததால் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க விரும்பினார்கள். வறுமையில் இவர்கள் வாடினாலும் ஆறு மாதத்திற்கொருமுறை திருப்பதி வெங்கடாஜலபதியை மட்டும் இவர்கள் தரிசிக்கத் தவறுவதில்லை. ஒரு நாள் பெருமாள் இவர்கள் கனவில் தோன்றி, “நான் தென்பெண்ணை நதிக்கரையில் சிலை வடிவில் உள்ளேன். என்னை எடுத்துச் சென்று வழிபடுங்கள்என்று கூறியுள்ளார். இதன் படி சகோதரர்கள் இருவரும் நதிக்கரை சென்று அங்கிருந்த பெருமாளின் சிலையை எடுத்து ஒரு மாட்டுக்கொட்டத்தில் வைத்து வழிபட்டு வந்தனர்.

ஒரு முறை கோட்டகுட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் கிராமமே அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர். அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்தது. இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான வெங்கட்ரமணப்பா 1878ம் ஆண்டு இந்த சிலையை மலை மீது வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைத்து ஆண்டு தோறும் ஏப்ரல் 13ம் நாள் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து 1895ம் ஆண்டு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி, காளை சிலையை கண்டுபிடித்ததால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விநாயகர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கேரளபுரம்

மாவட்டம்

கன்னியாகுமரி

மாநிலம்

தமிழ்நாடு

வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். இராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.