Monthly Archives: February 2012

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

+91-4344-252608 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

பெருந்தேவி, மகாலட்சுமி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சூளகிரி

மாவட்டம்

கிருஷ்ணகிரி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த இவ்விடம் தமிழகத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டுஎன்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.

ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயரப் பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. இங்கு வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார்.

அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஓசூர்

அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோபசந்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடேஸ்வரர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஓசூர்

மாவட்டம்

கிருஷ்ணகிரி

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியை விஜயநகர அரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஓசூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கோட்டகுட்டா கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஆடு மேய்த்து வந்தனர். இவர்கள் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்ததால் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க விரும்பினார்கள். வறுமையில் இவர்கள் வாடினாலும் ஆறு மாதத்திற்கொருமுறை திருப்பதி வெங்கடாஜலபதியை மட்டும் இவர்கள் தரிசிக்கத் தவறுவதில்லை. ஒரு நாள் பெருமாள் இவர்கள் கனவில் தோன்றி, “நான் தென்பெண்ணை நதிக்கரையில் சிலை வடிவில் உள்ளேன். என்னை எடுத்துச் சென்று வழிபடுங்கள்என்று கூறியுள்ளார். இதன் படி சகோதரர்கள் இருவரும் நதிக்கரை சென்று அங்கிருந்த பெருமாளின் சிலையை எடுத்து ஒரு மாட்டுக்கொட்டத்தில் வைத்து வழிபட்டு வந்தனர்.

ஒரு முறை கோட்டகுட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் கிராமமே அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர். அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்தது. இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான வெங்கட்ரமணப்பா 1878ம் ஆண்டு இந்த சிலையை மலை மீது வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைத்து ஆண்டு தோறும் ஏப்ரல் 13ம் நாள் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து 1895ம் ஆண்டு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி, காளை சிலையை கண்டுபிடித்ததால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இப்படி பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.