Category Archives: வேலூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர், ஆற்காடு தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

கலியுகத்தில் முதற்பகுதியில் இருந்தவர் ஸ்யமந்தகர் எனும் மகரிஷி. அவரது மனைவி மானஸாதேவி. கண்ணனிடம் பரமபக்தி கொண்டவர். ஸ்ரீகிருஷ்ணனை இம்மகரிஷியும், அவரது மனைவியும் ஆராதிக்காமல் ஒருதுளி நீரும் பருகுவதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்து, தங்கள் வாழ்நாளைக் கழித்து வந்தனர். எங்கெல்லாம் தனது அவதார காலத்தில் கண்ணன் லீலைகள் புரிந்தானோ, அந்தப் புண்ணிய சேத்திரங்கள் அனைத்தையும் மனைவியுடன் சென்று தரிசிப்பதில் ஆனந்தம் அடைந்து வந்தார் ஸ்யமந்தகர்.

கோகுலம், ஆயர்பாடி, மதுரா, பிருந்தாவனம், துவாரகை என்று எந்த இடங்களில் எல்லாம் கண்ணனின் திருவடிகள் பட்டிருக்குமோ அங்கெல்லாம் சென்று தரையிலும், மண்ணிலும் விழுந்து புரள்வார். கண்ணனின் திருவடிகள் எங்காவது பட்டிருக்கும்; அவ்விதம் அந்தப் பிரபுவின் திருவடிகள் பட்ட இடம் தனது உடலில் படவேண்டும் என்று புரண்டு வருவது வழக்கம். இந்த பிரம்மரிஷியின் ஸ்ரீகிருஷ்ண பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர்

அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர், வேலூர் மாவட்டம்.

வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 20 km தொலைவில் கண்ணமங்கலம் என்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர் உள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து காட்டுக்கானல்லூர் சாலையில் சென்றால் 5 km தொலைவில் இந்த சிங்கிரிகோயில் உள்ளது. ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றே. இந்த கோயில் பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது.

இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் லக்ஷ்மி தேவி, நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருப்பார். இத்திருக்கோயிலில் ஸ்ரீலக்ஷ்மி தேவி நரசிம்மரின் வலது மடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை நரசிம்மரிடம் கூறி நிறைவேற்றி வைக்கிறார். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சன்னதியின் இடப் பக்கம், என் இதயத்தை திறந்து பார்த்தால் அதில் என் தாய் தந்தை வடிவில் இராமரும் சீதா தேவியும் இருப்பார்கள் என்று இதயத்தை பிளந்து காட்டி பக்திக்கு இலக்கணம் வகுத்த அனுமனின் சன்னதி உள்ளது.